Friday, July 18, 2008

குறிஞ்சிக்குமரா

கம்பஸுக்கு போன புதிசில அந்தா இருக்கு குறிஞ்சிக் குமரன் கோயில் எண்டு மகாவலி ஆற்றுக்கு அங்கால ரெண்டு மூண்டு மலை தாண்டி தூரத்தில மலை உச்சியில தெரிந்த கோயிலைக் காட்டினாங்கள். இத்தினை மலை தாண்டி, இந்த குளிருக்க கோயிலுக்கு நடந்து போறது எனக்கு சரிப்பட்டு வராது எண்டுதான் முதல்ல நினைச்சனான். ஆனா வெள்ளிக்கிழமை லெக்சருக்கு போறாங்களோ இல்லையோ எல்லாரும் கோயிலுக்கு வெளிக்கிட்டு ஓடிருவாங்கள். அப்பிடி என்ன இந்த கோயில்ல விஷேசம் எண்டு கேட்டதுக்கு "அமைதியா மலையும் மலை சார்ந்த இடத்தில கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கு", " காலாற கோயிலுக்கு நடக்கிறதே சுகம்", "தியானமும் பஜனையும் மனதுக்கு இதமா இருக்கும்" எண்டு கனக்க காரணங்கள் சொன்னாங்கள். நானும் கோயிலுக்கு போகத்தொடங்கின பிறகுதான் அட்டை கடிக்க கடிக்க கோயிலுக்கு போறதுக்கான உண்மையான காரணங்கள் என்ன எண்டு விளங்கிச்சு.


அட boys, girls எல்லாருமே ஒன்பது மணி லெக்சருக்கு எட்டு ஐம்பதுக்கு எழும்பி சாடையா தண்ணியை முகத்துக்கு காட்டிபோட்டு, விடிஞ்சும் விடியாமலும் ஓடுற ஆட்கள்தானே. ஆனா கோயிலுக்கு போறது அப்பிடி இல்லையே. விஜயவர்த்தனா, ராமநாதன் லேடிஸ் ஹொல்ரல்ல இருந்து சாறி கட்டி வடிவா வெளிக்கிட்டு கூட்டமா கோயிலுக்கு வருவினம். அத பார்த்தபிறகுதான் மலையும் மலை சார்ந்த இடமும் எப்பிடி கண்ணுக்கு குளிர்ச்சியா மாறுது எண்டு விளங்கிச்சு. விஜயவர்த்தனா ஹால் மட்டும் விறு விறு எண்டு நடக்கிறவன்கள், அதுக்கு பிறகு வேகத்தை குறைச்சு எப்பிடியும் ஒரு மகளீர் அணியுடன் join பண்ணிருவான்கள். அதுக்கு பிறகு காலாற கோயிலுக்கு போறது சுகமாத்தானே இருக்கும். போற வழியிலேயே இப்பிடி எண்டா கோயில்ல எப்படி எண்டு சொல்லத்தேவையில்லை. எல்லாரும் பத்தி பழமா பரவசமா நிற்பாங்கள். எப்பிடி இருந்தாப்போல இவ்வளவு பக்தி வாறது எண்டு விளங்கிறேல்ல. இதை விட Engineering faculty இல instructor ஆ இருக்கிற கொஞ்சபேர் கோயில் மடத்திலேயே தங்கியிருப்பினம். மாலை கட்டவேணும் பஞ்சாமிர்தம் குழைக்க வேணும் எண்டு சொல்லி தங்களுக்கு பிடித்த girlஐ help பண்ண கூட்டிகொண்டு போயிருவினம். ஆராவது பெடியள் ஆசையில தாங்களும் மாலை கட்டபோனா, "போ போய் பூ புடுங்கிக்கொண்டு வா" எண்டு கோயிலுக்கு பின்னுக்கு துரத்திவிட்டிருவாங்கள். நானும் Instructor ஆ இருக்கேக்க, கோயில் மடத்தில இருக்க apply பண்ணி பார்த்தனான். ஆனா என்ர personality அவைக்கு இடைஞ்சல் எண்டோ என்னவோ reject பண்ணிபோட்டாங்கள்.


எனக்கு கோயில்ல பிடித்த இன்னொரு விசயம் மகேஸ்வர பூசை. கோயிலுக்கு போனோண்ண முருகனை கும்பிட முதல் முன்னுக்கு என்னென்ன படைச்சிருக்கு எண்டுதான் பார்ப்பன். வடை, பொங்கல், சுண்டல் எண்டு இருக்கேக்க சிலநேரம் பின்னால முருகன் இருக்கிறது கூட கண்ணுக்கு தெரியாது. ஆனா சிலபேர் அதிலையும் கைவரிசையை காட்டிபோடுவாங்கள். எங்களுக்கு எண்ணி நாலு சுண்டல் தந்து போட்டு, Saree கட்டின ஆக்களுக்கு அள்ளி அள்ளி குடுத்து வெறுப்பேத்துவாங்கள்.
ஒருக்கா யாரோ ஓரு சேவலை கோயிலுக்கு நேர்ந்து குடுத்திற்றினம். சேவலை கண்டவுடன பெடியளுக்கு வாயில எச்சில் ஊற தொடங்கீற்று. எப்ப சேவலை ஏலம் விடப்போறியள் எண்டு கோயில் கொமிற்றியை நச்சரிக்க தொடங்கீற்றினம். நாங்கள் கொஞ்சப்பேர் சேர்ந்து என்ன விலை குடுத்தாவது சேவலை வாங்கிறது எண்டு தீர்மானிச்சம். எங்கள மாதிரி கனபேர் சேவலுக்கு போட்டி போட்டதால unofficialஆ அதின்ர விலை எக்கசக்கமா ஏறிப்போச்சு. ஆனா கடைசிமட்டும் அதை ஏலத்துக்கு விடவேயில்லை. பிறகு எங்க கொஞ்ச நாளா சேவலைக் காணேல்ல எண்டு கேட்டா "அதைக் காணேல்ல களவு போயிற்றிது " எண்டாங்கள். சேவலுக்கு என்ன நடந்தது எண்டு அந்த குறிஞ்சி குமரனுக்குதான் வெளிச்சம்.

1 comment:

எஸ் சக்திவேல் said...

>விஜயவர்த்தனா, ராமநாதன் லேடிஸ் ஹொல்ரல்ல இருந்து சாறி கட்டி வடிவா வெளிக்கிட்டு கூட்டமா கோயிலுக்கு வருவினம்.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூவாம் சர்க்கரை :-)