Saturday, September 24, 2011

ஒரு அகதியின் டயரி - 3 -Crossfire


இப்ப எப்பிடியோ தெரியாது. அப்ப ஊரில இருந்து யாழ்ப்பாணம் போய் படிக்கிறது எண்டது ஒரு ஸ்டைல். யாழ்ப்பாணத்தில இருக்கிற பள்ளி கூடத்தில  சேர்ந்து படிக்க வேணும். அது சரிவரேல்ல எண்டால், டியூஷனுக்காவது டவுனுக்கு போய் வர வேணும். அதுதான் ஊருக்க கன பெடியளின்ர ஆசை. அங்க போய் படிக்கிறமோ இல்லையோ,  ஊருக்க செய்ய ஏலத சேஷ்டையள் எல்லாம்  ஊர் விட்டு ஊர் வந்து டவுனுக்கதான் செய்யலாம்.   O/ L  மட்டும் ஊரிலேயே படிச்ச எனக்கும்   ரிசல்ட் வந்த உடன டவுணுக்க படிக்கிற ஆசை வந்திற்று. நானும் யாழ்ப்பாண பள்ளிகூடங்களுக்கு application  போட்டு, அனுமதி பரீட்சைக்கு கடிதமும்  வந்திருந்தது.

அப்ப தீவுபகுதி சனத்துக்கு போக்குவரத்துதான் பெரிய பிரச்சினையா இருந்தது. இங்க இருந்து யாழ்ப்பாணம் போறதெண்டால்  ஊர்காவல்துறை - காரைநகர் ferry (படகு) இல ஏறி போகவேணும் அல்லது யாழ் கோட்டைக்கு பக்கத்தில இருக்கிற பண்ணை பாலத்தாலதான்  போகவேணும். ஆனா ரெண்டுமே பிரச்சினையான பாதைதான்.  நேவிக்கரனின்ர கெடுபிடி தாங்கேலாமல் படகு சேவை முற்றாக நிப்பாட்டியாச்சு.   பண்ணை பலத்தால போற எண்டாலும் உயிரை கையில பிடிச்சுக்கொண்டுதான் போக வேண்டியிருந்தது.  ஒரு    பக்கம்   இயக்கங்களின் சென்றி பொயின்ற்   , மற்ற பக்கம் கோட்டை சுவர்.  நடுவில பண்ணை ரோடு. ஆமிகாரர் வெளியில  வர ஏலாட்டியும், அப்பப்ப பண்ணை ரோட்டால போற  வாகனங்களை சுட்டு தங்கடை வீரத்தை கட்டிக்கொண்டு இருந்தாங்கள்.

    அண்டைக்கு எனக்கு யாழ்ப்பணத்தில  இல அனுமதி பரீட்சை. விடிய வெளிக்கிட்டு பஸ் ஏறுறதுக்கு சந்தியில போய் பாக்கிறன். கடையெல்லாம் பூட்டு.  சந்தியில நிண்ட ஒராள், "டெலோவும்  புலியளும் சண்டை பிடிக்க வெளிக்கிட்டுடான்கள்.  இனி பஸ்சும் ஓடாது . இங்கினேக்க நிண்டு விடுப்பு பார்க்காமல் கெதியா வீட்ட போங்கோ "  எண்டார்.  எனக்கு எக்ஸாமை விட்டிற்று   வீட்ட போகவும் மனமில்லை.கொஞ்சநேரம்  நிண்டு பார்த்தான். சண்டை நடக்கிறமாதிரி ஒண்டும் தெரியேல்ல.  சரி பக்கத்து ஊர் வேலணைக்கு  போய் அங்க இருந்து பஸ் எடுப்பம் எண்டிற்று சைக்கிளில வேலணை  வங்களாவடி சந்திக்கு போனான். 
      வங்களாவடி சந்தியை நெருங்கேக்க பின்னால மோட்டர் சைக்கிளில வந்தவங்கள் சுட தொடங்கிற்றாங்கள். சந்தியில இருந்தும் சுடுறாங்கள் . நடுவில நான். நான் சைக்கிளை போட்டிற்று விழுந்து படுத்திற்ரன். கொஞ்ச நேரம் ஒரே வெடிச்சத்தம். புழுதி மணமும் வெடி மருந்து மணமும் சேர்ந்து அடிச்சிது.  அவ்வளவு ரவுன்சையும், குண்டுகளையும் காரைநகர் நேவி கேம்ப்க்கு  அடிச்சிருந்தா கேம்ப்பையே பிடிச்சிருக்கலாம்.

கொஞ்ச நேரத்தில சத்தம் நிண்ட உடனே நிமிர்ந்து பார்த்தன். ரோட்டுக்கு மற்ற பக்கத்தில கரண்ட கம்பி (11000V) அறுந்து வேலிக்கு  மேல விழுந்து வேலி எரிஞ்சு கொண்டிருந்தது. மெல்லமா சைக்கிள வேலிக்கு மேலால தூக்கி போட்டுடு வேலியை பாஞ்சு, சைக்கிளையும்  தூக்கிக்கொண்டு ஓட தொடங்கிட்டன்.  ஓடி ஓடி அராலி துறை சந்திக்கு வந்திட்டன். புங்குடுதீவு, வேலணை, ஊர்காவல்துறை இல இருந்து யாழ்ப்பாணம் போற எல்லா பஸ்சும் அராலி சந்தி தாண்டித்தான் போகவேணும்.  ஆனா பஸ் ஒண்டையும் காணேல்ல. பாதி தூரம் வந்தாச்சு. சரி திரும்பி வீட்ட போவமா எண்டு யோசிச்சுக்கொண்டு நிக்கேக்க, சைக்கிள்ள வந்த இன்னொரு ஆள், நானும் யாழ்ப்பாணம்தான் போறான். வரும் ரெண்டுபோரும்  ஒண்டா போவம் எண்டு சொல்ல நானும் ஓம் எண்டு வெளிக்கிட்டுடன். 
  
      கோட்டைக்கு கிட்ட போகேக்க கை கால் எல்லாம் நடுங்க தொடங்கிற்று. ரோட்டில எங்களை தவிர வேற ஒருத்தரும் இல்லை. ரோட்டில இருந்து  கோட்டை சுவர் ஐம்பது மீட்டர் தூரம்தான் இருக்கும். இந்த நேரம் பார்த்து என்ர சைக்கிளுக்கு காத்து வேற போச்சுது. மகாபரதத்தில கர்ணன் சாக முதல் , தேர் சில்லு நிலத்தில புதைந்துதாம். அது மாதிரி என்ர சைக்கிளும் கடைசிநேரத்தில கை விட்டிற்று. அந்த அசுமாத்தத்தை பார்த்திற்று ஆமிக்காரன் சுட்டிருவானோ எண்டு பயமா இருந்தாலும், உள்ள எல்லா கடவுளுகளையும் கும்பிட்டுக்கொண்டு  ரெண்டு பேரும் மெல்ல மெல்லமா கோட்டையை தாண்டி டவுணுக்க போயிற்றம். 
    டவுணுக்க வந்த உடன கூட  வந்தவர் சொன்னார்.  " இவங்கள் தங்களுக்க அடிபட்டு சாகிறாங்கள். தாங்கள்  ஏன் ரவுன்சை வேஸ்டாக்க வேணும் எண்டு ஆமிக்காரன் சும்மா இருந்திற்றான் போல " எண்டார். 
  
 அந்த ஆள் சென்னது எவ்வளவு உண்மை எண்டு ஊருக்கு திரும்பி வந்த பிறகுதான் தெரிந்தது. சந்தியில ஒரு தண்ணி bowser  ஒண்டு எரிஞ்சு போய் இருந்தது .  கடை கட்டடம் ஒன்று வெடி வைத்து தகர்க்க பட்டிருந்தது.  நான் விழுந்து கிடந்த இடத்திற்கு பக்கத்திலிருந்த தபால் கந்தோர் அடியில், சண்டைக்கு நடுவில மாட்டுபட்டு ஒரு ஆள் இறந்து போயிருந்தான். 

Monday, September 12, 2011

ஒரு அகதியின் டயரி - 2 சுடலை காவல்

  
 எங்கட நல்ல காலத்துக்கு அண்டைக்கு நேவிக்காரன், ஊர் எல்லை வரைக்கும் வந்திற்று திரும்பி போயிற்றான். ஊர் பக்கம் வரயில்லை. இரவு முழுக்க ஒரு கோயிலில படுத்திற்று அடுத்த நாள் விடிய காலம கொண்டு போன சாமான் எல்லாம் திருப்பி அள்ளி கட்டிக்கொண்டு வீட்ட வந்திற்றம். கொண்டு போன சாமானில முக்காவாசி அகதி வாழ்க்கைக்கு உதவாத சாமான்.   போட்டோ  ஆல்பம் , ஒரு சூட்கேஸ் நிறைய சாறி, அது இது எண்டு கிடந்ததை கொண்டு ஓடினதே தவிர எது எது தேவை எண்டு யோசிக்க இல்லை. ஆனா பிறகு இப்படி ஓடேக்க மறக்காமல் கொஞ்ச சட்டி பானை, அரிசி, தேங்காய் எண்டு எடுத்துக்கொண்டுதான் ஓடுறது. 
   நேவிக்காரன் வாறானோ இல்லையோ, அடிக்கடி வதந்தி பரவி சனம் ஓடுறது வழக்கமா போச்சு. இதை தடுக்க ஒரு நாள் வாசிக சாலையில கூட்டம் நடந்தது. நேவிக்காரன் அடிக்கடி சத்தம் இல்லாம கடற்கரை பக்கம் வந்திற்று போறான். ஊருக்க அவங்கள் வந்து ஏதாவது அசம்பாவிதம் நடக்க முதல் நாங்கள் வெளிக்கிட்டு போகவும் வேணும். அதுக்கு என்ன செய்யலாம் எண்டு ஒரு பெரிய மந்திரஆலோசனை நடந்தது. கடைசியா கடற்கரைக்கு பக்கத்தில இருக்கிற சுடலையடியில இரவில காவல் இருக்க வேணும், எதாவது அசுமாத்தம் இருந்தா ஓடி வந்து கோயில் மணியை அடிச்சு எல்லாரையும் உசார் படுத்த வேணும் எண்டு முடிவெடுக்க பட்டது. எல்லாம் சரி ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுறது. இரவில சுடலையில நிண்டு யாரு காவல் காக்கிறது ?
     ஆனா கனபேர் தாங்கள் வாறம் எண்டு கையை தூக்கிசினம். எல்லாரும் தூக்குகினம் எண்டு போட்டு நானும் ஓம் எண்டுட்டன். எல்லாரையும் குரூப் குரூப்பா பிரிச்சு எப்ப எப்ப காவல் இருக்க வேணும் எண்டு அட்டவணை   எல்லாம் போட்டாச்சு. எங்களுக்கு விழிப்பு குழு எண்டு ஒரு நல்ல பெயர் வேற சூட்டப்பட்டது.  ஒரு நாள் அமாவாசை கும்மிருட்டு நாளில எனக்கு duty வந்தது. அடிக்கவே கூடாது என்ற ஒடர் ஓட ஒரு torch லைட்உம் தரப்பட்டது. நாங்கள் மூண்டு பேர் சுடலைக்கு பக்கத்தில இருக்கிற பூவரச மரத்தடியில காவல் இருந்தம்.  ஓடேக்க சரியா ஊர் பக்கம் ஓட வேணும் எண்டதால,  நான் அடிக்கடி ஊர்பக்கம் திரும்பி திசையை சரி பார்த்துக்கொண்டு இருந்தன். கும்மிருட்டு, பக்கத்தில இருந்த ஆளை கூட சரியாய் தெரிய இல்லை. நேவிக்காரன் பக்கத்தில வந்து, ஊருக்க    எப்பிடி போறது எண்டு வழி கேக்கும் மட்டும் சத்தியமா அவங்கள் வாறது தெரிய போறதில்லை. எண்டாலும் ஒரு அசாத்திய துணிவோட காவலுக்கு நிண்டம்.
    இரவு ரெண்டு மணிபோல பனங்காய் பணியாரமும் தேத்தண்ணியும் வந்தது. அதையும் ஒரு பிடி பிடிச்சிற்று காவலை தொடர்ந்தம். விடிய காலமா நாலரை ஐந்து மணி இருக்கும். சாடையா விடிய தொடங்கிற்று. கடற்கரை பக்கமா ஏதோ நடமாட்டம். சின்னதா ஒரு லைட் வேற தெரிஞ்சுது.  நான் ஓட ரெடி. ஆனா கூட இருந்த ஆள், கொஞ்சம் பொறுங்கோ இன்னும் கிட்ட வரட்டும்  எண்டு சொல்ல நாங்கள் மரத்துக்கு பின்னால ஒளிச்சிருந்து பார்த்து கொண்டிருந்தம். கிட்ட வந்த உடன பார்த்தா , யாரோ ஒரு குடிகாரன்  தவறணையில கள்ளு அடிக்சு விழுந்து கிடந்திற்று விடிய வெறி முறிய, ஒரு பீடிஐயும் பத்த வைச்சுக்கொண்டு கடக்கரை ஓரமா நடந்து வந்து கொண்டு இருந்தார்.  நாங்கள் இருந்த பயத்தில அவருக்கு நல்ல ஏச்சு கொடுத்திற்று அன்றைய காவல் கடமையை முடிச்சுக்கொண்டு வீட்ட திரும்பினம்.

Thursday, September 8, 2011

ஒரு அகதியின் டயரி - 1


அகதி வாழ்க்கை ஈழத்தமிழனின் தலைவிதி, இதுக்கு நானும் விதிவிலக்கில்ல. எண்பத்தி நாலாம் ஆண்டு முதல் முதலா வீட்ட விட்டு  அகதியா வெளிக்கிட்ட நாள் முதலா, ஊருரா அலைஞ்சு, நாடு நாடா அலைஞ்சு கடைசியா இங்க வந்து தஞ்சம் அடைஞ்சு இருக்கிறன்.
  வன்னியில எங்கட மக்கள் பட்ட கஷ்ரத்தோட பாத்தா, நான்  பட்டதெல்லாம்  தூசு எண்டாலும், அதையும் எழுதுறன்.  இந்த தொடர்பதிவை நிம்மதி தேடி, நாட்டை விட்டு, உடமைகளை துறந்து,   படகேறி பாக்கு நீரிணையை கடக்க முற்பட்டபோது,   பொங்கும் கடலில்    மடிந்து போன எம் உறவுகளுக்கு காணிக்கையாக்குகிறேன்.

  .      யாழ்ப்பணம் தீவுபகுதியில இருக்கு எங்கட ஊர்.   கடலுக்கு பக்கத்தில இருக்கிற உவர் நிலம் எண்டாலும், புகையிலை, மிளகாய், வெங்காயம் எண்டு பயிரிட்டு கஷ்ரபட்டு உழைக்கிற விவசயிகள், அதை கொண்டுபோய் இலங்கை முழுக்க விக்கிற வியாபாரிகள் எண்டு ஒரு பிஸியான ஊர்.  ஊருக்க ரெண்டு கோயில். அங்க நிண்டு அரட்டை அடிக்கிற பழசுகள். சைக்கிள்லில  சுழட்டிக்கொண்டு திரியிற இளசுகள், எல்லாம் நம்ஊரிலும்  உண்டு. யாழ் கோட்டை, காரைநகர், நயினா தீவு எண்டு மூண்டு முகாம்களுக்கு இடையில இருந்தாலும், அப்பப்ப வந்து  விழுந்து வெடிக்கிற  செல்களை தவிர ஊர் அமைதியாதான் இருந்தது.


 ஒருநாள் விடிய காலம ஐந்தரை மணி இருக்கும். அம்மன் கோயில் ஒலிபெருக்கியில பெரிசா பக்திப்பாட்டு போய்க்கொண்டிருந்தது. அம்மன் கோயில் பாட்டு சத்தம், ஊரில இருக்கிற கொஞ்ச கும்பகர்ணனின்ர சொந்தகாரரை தவிர, மற்ற எல்லாரையும் நித்திரையால எழுப்பி விட்டிருந்து. நானும் தம்பியும் எழும்பி முகம் கழுவீற்று, அம்மா காச்சி தந்த பாலையும் குடிச்சிற்று, மாடுகளை தரவை காட்டுக்கு ஒட்டி கொண்டு போய் கொண்டிருந்தம். ஊருக்கு மேற்கால தோட்டவெளி. அதையும் தண்டி போனா கடற்கரைஐ ஒட்டி இருக்குது தரவைக்காடு. பள்ளிகூடம் போக முதல், மாடுகளை கொண்டு போய் தரவையில மேய விட வேண்டியது எங்கடவேலை . ஊரில இருக்கிற சில பேருக்கு, காட்டுக்கு போய் கற்றோட்டமா  காலை கடன் முடிச்சாத்தான் அண்டைய பொழுது விடிஞ்ச மாதிரி இருக்கும். அவையும் எங்களோட சேர்ந்து காட்டு பக்கம் வந்து கொண்டிருந்தினம். நாங்க தரவை காட்டுக்கு நடுவில நிக்கிறம், தலைக்கு மேலால ஏழு  ஹெலிகாப்டர்கள் பதிவா கரம்பன் பக்கமா பறந்து போச்சுது. முதல்ல விடுப்பு பாத்துக்கொண்டு நிண்ட நாங்கள், சூட்டு சத்தம் கேக்க தொடங்கின உடன, விழுந்தடிச்சுகொண்டு வீட்ட ஓடி வந்திற்றம்.

   சூட்டு சத்தம் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. முதல்ல என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்ல. ஆனா ஒன்பது, ஒன்பதரை  மணி அளவில கரம்பன் ஊர் சனமெல்லாம் அகதியா எங்கட ஊர் பக்கம் வர தொடங்கிற்றினம். நேவிக்காரன் கரம்பன் கடற்கரை பக்கமா  படகிலயும்  ஹெலிகாப்டர் இலயும் வந்து இறங்கிற்ரான் எண்டு அவ சொல்லித்தான்  எனக்கு தெரியும். நான் எங்கட வீட்டு மதிலில இருந்து, சனம் அகதியா, எங்க போறது எண்டு தெரியாம, கால் போன போக்கில,  போய் கொண்டிருக்கிறதை வேடிக்கை  பார்த்துக்கொண்டு இருந்தன். படுக்கையால  எழும்பி, உடுப்பு மாற்றக்கூட நேரம் இல்லாம. போட்ட உடுப்போட, கையில கிடைச்சதை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கொண்டிருந்திச்சினம் .  அவையளோட வந்த நாய்களும், எங்கட ஊர் நாய்களும் சண்டை போட்டு, அதுகள் வேற ஊரை அமர்கள படுத்திக்கொண்டிருந்ததுகள்.

     முதல்ல  சும்மா விடுப்பு பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவும் அவற்ற friends உம் திடீர் தொண்டர்களா மாறி வந்த எல்லாரையும் அம்மன் கோயில் மடத்துக்கு அனுப்பிக்கொண்டிருந்தினம். கொஞ்ச நேரத்தில கோயில் மடம் நிறைஞசுபோட்டுது. பன்னிரண்டு  ஒரு மணியாகியும் சூட்டு சத்தம் குறையிற மாதிரி இல்லை. இப்ப அண்ணாவும் அவற்ற friends உம் கோயில் திருவிழா  நேரம் அன்னதானத்துக்கு மடத்தில சமைக்கிற, அண்டா குண்டா எல்லாம் வெளியில எடுத்து, எல்லாற்ற  வீட்டையும் போய் அரிசி, தேங்காய் வாங்கி  கஞ்சி காச்ச தொடங்கிற்றினம். விடிய காலம படுக்கையல எழும்பி ஓடி வந்த சனம், ஒரு வாய் தேத்தண்ணி கூட குடிச்சிருக்க வாய்ப்பில்லை. எல்லாருக்கும் நல்ல பசி. கஞ்சியாவது கிடைக்கிதே எண்டு எதிர்பாத்து இருந்திச்சினம்.
     ஆனா காச்சின கஞ்சிய குடிக்கிறதுக்குள்ள, இந்தா நேவிக்காரன் ஊருக்க பக்கத்தில வந்திற்றான் எண்டு சேதி    பரவ, வந்த சனத்தோட நாங்களும் அகதியா கையில கிடைச்சதை எல்லாம் எடுத்துக்கொண்டு ஓட்டம் எடுத்தம். வந்த வெள்ளம் நிண்ட வெள்ளத்தையும் அள்ளி கொண்டு போனமாதிரி, நாங்களும் சனத்தோட சனமா அகதியா கிழக்கால வேலணைப் பக்கம்  போக   தொடங்கினம்.
      காச்சின கஞ்சி அவ்வளவும்   குடிக்க ஆளில்லாம அப்பிடியே கிடந்தது.