Tuesday, October 25, 2011

ஒரு அகதியின் டயரி - 7 - JVP காலம்

என்னைபோல பிள்ளை பிடிக்கு தப்பி, கொழும்புக்கு ஓடின பெடியளுக்கு, கண்டி, காலி, கொழும்பில இருக்கிற தமிழ் கடையள்தான் வேடந்தாங்கல். படுக்கை, சாப்பாடு எல்லாம் free . அதோட கடையில நிக்கிறதால, கை செலவுக்கும் காசு கிடைக்கும்.   நான் தங்கினது வெங்காயம், மிளகாய், அரிசி, கருவாடு எல்லாம் கொழும்பில இருந்து இறக்கி, சில்லறை வியாபாரிகளுக்கு விக்கிற ஒரு பலசரக்கு கடையில.  ஞாயிற்று கிழமை லீவு. அண்டைக்கு  நாங்க, காலி கோட்டை, கடற்கரை, கோயில் எண்டு சுத்தி திரிவம். எவ்வளவுதான் குளிச்சு வடிவா வெளிக்கிட்டாலும், கடை கருவாட்டு மணம் கூடவே வாறதால, சிங்கள பெட்டையள் ஒருத்தரும் திரும்பியும் பார்க்க மாட்டாளவ. கையில கொஞ்சம் காசு கூடிச்செண்டால்  வெளிக்கிட்டு கொழும்புக்கு போய் ரெண்டு படமும் பார்த்து கிடந்த காசெல்லாம் சிலவழிச்சு முடிய திரும்பி கடைக்கு வருவம்.
   அது JVP பிரச்சினையின்ற  உச்சகட்ட நேரம். வேலியில நிண்ட ஓணானை பிடிச்சு  பாக்கெட்டுக்க விட்ட மாதிரி, இந்தியன்  ஆமி வந்த பிறகு,  வடக்கு கிழக்கில அட்டகாசம் பண்ணி திரிந்த அதிரடி படையை  (STF) ஊருக்க அனுப்ப,  அவங்கள் தங்கட ஊருக்குள்ளேயே பெடியளை கொன்று குவித்த நேரம் அது.  கொழும்புக்கு போகேக்க கழுத்துறை ஆற்றம்கரையில அரைவாசி எரிஞ்ச சடலமெல்லாம் நான் பார்த்திருக்கிறன்.  

  நான் காலிக்கு  வந்த கொஞ்ச நாளில,  கரனும் பயிற்சி முகாமில இருந்து தப்பி ஓடி கடைக்கு வந்திற்றான். கரன் ஊரிலேயே கடை வைச்சிருந்தவன். எண்டாலும் பிசினஸில அவ்வளவு அக்கறை  இல்லை. அங்க இங்க காசு பிரட்டி வெளிநாட்டுக்கு போக ட்ரை பண்ணிக்கொண்டு திரிஞ்சான்.  நான் எப்படா இந்தியன் ஆமி போகும், எப்ப வீட்ட திரும்பி போறது எண்ட நினைப்பில இருந்தன்.
 வெளிநாட்டுக்கு போறதில பெரிய பிரச்சினை ஒரு நம்பிக்கையான ஒரு நல்ல ஏஜண்டை பிடிக்கிறதுதான். ஒரு ஏஜெண்ட்க்கு பத்து துணை எஜண்ட். அவைக்கு பத்து பேர் எண்டு ஏஜெண்ட் வேலை செய்யிறவ கனபேர்.
ஆளாளுக்க கமிசன் எடுக்க வெளிநாட்டுக்கு போற rate எகிறீரும்.
அதோட ஊரில உள்ள சுத்துமாத்து காரரெல்லாம் ஏஜெண்ட் எண்டு  சொல்லிக்கொண்டு திரியிறதால நம்பிக்கையான ஆளை பிடிக்கிறது கஸ்ரம்.
 அங்க இங்க விசாரிச்சு  கடைசியா வெள்ளவத்தையில இருக்கிற ஒரு lodge  சுல இருந்த  ஒரு ஏஜெண்ட சந்திக்க நானும் காரனோட போனன்.  அவருக்கு பெயரே "எஜின்சி கணேசு" தான்.  அவரும் வலு பந்தாவாதான் இருந்தார்.

இப்பதான் பத்துபேரை கனடாவுக்கு அனுப்பிபோட்டு வாறன் அது இது எண்டு அளந்துபோட்டு,

"நீங்க எங்க போகவேணும்" எண்டார்.

கரன் வெளிநாட்டுக்கு போக வேணும் எண்டு  யோசிச்சானே  தவிர  எங்க போறது எண்டு யோசிக்கேல்ல.


"கனடா, லண்டன், ஜெர்மனி எங்க எண்டாலும் பரவாயில்லை. கெதியா போக கூடிய நாட்டுக்கு அனுப்புங்கோ"

"அடுத்த கிழமை பேங்க்கொக் கில இருந்து லண்டனுக்கு ஒரு batch போகுது. நாளைக்கே காசை கொண்டந்து கட்டினா அவையோட உங்களையும் அனுப்பி விடுறன் "

"எவ்வளவு காசு அண்ணை"

" வெளியில பத்து போகுது. நீங்க என்னட்ட நேர வந்தபடியால ஒம்பது  கொண்டுவந்து கட்டினா போதும் "

"ஒம்பது லட்சமா? கொஞ்சம் குறைக்கேலாதா ? இப்பதான் பயிற்சி முகாமில தப்பி வந்தனான்"

" தம்பி ஏலுமான அளவு குறைச்சாச்சு. உங்க கனபேர் காசோட ரெடியா நிக்கினம். கெதியா கொண்டந்து கட்டினா அடுத்த கிழமையே லண்டன் போகலாம்"

வெளியில வந்த உடன நான் " ஒன்பது லட்சத்துக்கு எங்கடா போறது. உவனை பார்த்தா  சுத்தல்காரன் மாதிரி இருக்கிறான்" எண்டன்.

  ஆனா கரன், கனடா மாமா, லண்டன் சித்தப்பா, அவுஸ்திரேலியா அன்ரி எண்டு எல்லாரோடையும்  போன்ல கதைச்சு, இன்டர்நேஷனல் லெவலில கடன் வாங்கி ரெண்டு மூண்டு நாளில ஒம்பது லட்சம் சேர்த்திற்றான்.

 ஒம்பது லட்சத்தையும் ஆயிரம் ரூபா நோட்டா மாத்தி கட்டு கட்டா கட்டி, ஒரு பையில போட்டுக்கொண்டு, ரெண்டு பேரும் விடிய காலமா காலியில இருந்து கொழும்புக்கு பஸ் ஏறினம்.     
  பஸ் ஹிக்கடுவயை தாண்டேல்ல.   நடுவழியில அதிரடி படை செக்கிங் எண்டு மறிச்சு போட்டாங்கள். ஒம்பது லட்சத்தோட ரெண்டு பேரையும் பிடிச்சான் எண்டால், காசும் போய் ரெண்டு பேரும் ஆத்தில பிணமா மிதக்க வேண்டியதுதான்.
  ஆனா பஸ் வாசலில நிண்ட ஆமிக்காரன், ஐடென்ட்டி கார்டை பாத்திற்று,

தேமலதா? வகிண்டோன்ன ( தமிழனா ? இறங்க வேண்டாம் ) எண்டான்

அண்டைக்குத்தான் முதன் முதலா தமிழனா பிறந்ததுக்கு சந்தோஷபட்டன்.          
     









Thursday, October 20, 2011

ஒரு அகதியின் டயரி - 6 The great escape



ஊருக்க பிள்ளை பிடிகாரரிட்ட பிடிபட்ட பெடியள்ள என்ட நண்பன் கரனும் ஒருவன். கரன் எவ்வளவு  பிரச்சினை எண்டாலும், விடிய காலம வந்து சந்தியில இருக்கிற தன்ர கடையை திறந்திருவான். அதுக்கு முக்கிய காரணம், சந்திக்கு பக்கத்தில்தான் அவன்ர அன்புக்குரியவளின்ர வீடும் இருக்கு. ஊர் முழுக்க பிள்ளை பிடிகாரர் தொல்லை எண்டாலும், கடைக்காரனை பிடிக்க மாட்டாங்கள் என்ற ஒரு நம்பிக்கை வேற.  வழக்கம் போல அண்டைக்கும் விடிய காலம வந்து கடைக்கதவைத் திறந்தாச்சு. ஆனா பத்து மணிபோல, வானில வந்த பிள்ளை பிடிகூட்டம் என்ன சொன்னாலும் கேளாமல் கடைக்க நிண்ட கரனை இழுத்து வானுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். முகாம் முகாம ஏறி இறங்கி விசாரிச்சும் ஒரு பிரயோசனமும் இல்லை. அங்கை இங்கை எண்டு மாற்றி  மாற்றி வைத்திருந்து கடைசியா கொண்டுபோய் பயிற்சி  முகாமில விட்டுட்டாங்கள்.

    இப்பதான் கொஞ்சநாளாதான் life interesting  போய் கொண்டிருந்தது. அதுக்குள்ள எல்லாமே  தலை கீழா மாறிப்போச்சு. இயலாமை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து ஆத்திரம் ஆத்திரமா வந்தாலும், கட்டுப்படுத்திக்கொண்டு  சும்மா இருந்தான். ஆத்திரபட்டு, வாக்குவாதப்பட்ட கனபேர், எழும்ப ஏலாத அளவுக்கு அடி வாங்கி மூலையில கிடந்தினம். அடி வாங்கிறதை விட, இப்போதைக்கு அவங்கட போக்கில போறதுதான் புத்தி எண்டு கரன் பொறுமையா இருந்தான். பிடிபட்ட எல்லா பெடியளையும் ஒரு பெரிய ground  இல வரிசையா நிப்பாட்டி, ஒருத்தர் பெரிய lecture  அடிச்சுக்கொண்டு இருந்தார். எதிரியை எப்படி தாக்கிறது, எதிரியை எப்படி பிடிக்கிறது எண்டு சொல்லி தருவம். அது இது எண்டு கனக்க கதைச்சுக்கொண்டு போனார். "எதிரி எதிரி எண்டுறீங்க, யாருங்கோ அந்த எதிரி" எண்டு கேக்க வேணும் போல இருந்தது. ஆனா எதுக்கு வம்பு எண்டு பேசாம இருந்திற்றான்.

   பயிற்சி சரியான கடுமையா இருந்தது. ஓடுறது. தாவுறது, தவழுறது எண்டு நாள் முழுக்க துரத்திக்கொண்டு இருந்தாங்கள். பின்னால வாறவங்களுக்கும் , முரண்டு பிடிக்கிறவங்களுக்கும்  அடி விழுகிறதால கஷ்ரபட்டு பயிற்சியை செய்துகொண்டு இருந்தான். பயிற்சி முகாமில கனக்க ஊர் பெடியள் இருந்தாலும் ஒருத்தரோடும் கதைக்க பிடிக்கேல்ல. எப்பிடி இந்த நரகத்தை விட்டு தப்பி போறது எண்டு யோசனையிலேயே காலம் கழிந்தது. பயிற்சி நேரம் ஒத்துழைத்த படியால சுதந்திரமா வெளியில உலாவ கூடியதா இருந்தது. முகாமிட அமைப்பு, காவல் எல்லாம் அவதானிக்க கூடியதா இருந்திது.
 ஒரு நாள் நடுநிசி வேளை, எல்லாரும் அயர்ந்து தூங்கிற நேரம், கரன் முள்ளு கம்பிகளுக்கு கீழால தவண்டு, வேலிகளுக்கு மேலால தாவி, பற்றை காட்டுக்குள்ளால ஓடினான். சும்மா செல்ல கூடாது. எடுத்த பயிற்சி நல்ல உதவி செய்தது. ஓடி ஓடி விடியிற நேரம் மெயின் ரோடுக்கு வந்திற்றான். விடிய காலமா வந்த ரவுண் பஸ்சை பிடிச்சி ஒருமாதிரி அந்த நரகத்தில இருந்து தப்பினான். ஊரை விட்டு போக மனம் இல்லாட்டியும், அண்டைக்கு ஓட வெளிக்கிட்டவன்தான் ஓடி ஓடி கடைசியா கனடாவில்தான் போய்தான் அந்த ஓட்டம் நிண்டுது.

Wednesday, October 12, 2011

ஒரு அகதியின் டயரி - 5 - பிள்ளபுடி காலம்


சின்ன வயதில, மெயின் ரோட்டுக்கு போகாத, பிள்ளைபிடிகாரன் பிடிச்சுக்கொண்டு போயிருவான். கொண்டுபோய் கருவாடு காய விடுறஇடத்தில காகம் குருவி கலைக்க விட்டிருவான் எண்டு பயமுறுத்துவினம். அப்ப நான் ஒரு பிள்ளை பிடிகாரனையும் காணேல்ல.  ஆனா நாங்க  படிக்கேக்க உண்மையாவே பிள்ளை பிடிகாரர் ஊருக்க உலாவ தொடங்கிரான்கள். ஊருக்க வானில ஏழு எட்டு பேரா வருவாங்கள். கண்ணிலபடுற பெடியளை துப்பாக்கி முனையில பிடிச்சுக்கொண்டு போயிருவங்கள். மாட்டுபட்டா   அவளவுதான்.  training  எண்ட பெயரில நாலு தரம் ஓட விட்டிட்டு, கொண்டுபோய் சண்டைக்கு நடுவில விட்டிருவங்கள். அமைதி படையின் ஆசிர்வாதத்தோட பிள்ளை பிடி நல்லாவே நடந்தது.  விருப்பம் இல்லாம துப்பாக்கி தூக்குறது எண்டது கொடுமையான விஷயம். ஏன் சண்டை பிடிக்கிறம், எதுக்கு பிடிக்கிறம் எண்டு தெரியாம, சுடவும் மனம் இல்லாம சண்டைக்கு  நடுவில நிண்டு சாகவேண்டியதுதான்.
       ஒருக்கா நான் யாழ்ப்பாணம் டியூஷனுக்கு போகேக்க பிடிச்சுக்கொண்டு போயிற்றாங்கள். கொண்டு போய் யாழ்ப்பாணம் central college ground இல பொழுதுபடும் மட்டும் இருத்தி வைத்திருந்தாங்கள். ஏதோ என்ர நல்ல காலம் அண்டைக்கு ஒருமாதிரி  தப்பி வந்திரன். அதுக்கு பிறகு எங்கட அட்டகாசம் எல்லாம் ஊரோட அடங்கி போச்சு. ஒருக்கா சந்திக்கு கடைக்கு போகேக்க அங்க வைச்சும் பிடிச்சிற்றான்கள். ஆனா அம்மாவும் சந்தியில நிண்ட  வேற கொஞ்ச பேரும் குழம்பின படியால என்னை இறக்கி விட்டிற்று போயிறான்கள். அதுக்கு பிறகு எங்களுக்கு வீட்டில house arrest போட்டாச்சு.  ஊரெல்லாம் ஒருவித டென்ஷன். ஊருக்க கன பெடியள் பிடிபட்டு போனாங்கள். எப்ப யாரு பிடிபடுவன்களோ எண்டு ஒரு பயம். ஆனா எனக்கு வீட்டுக்க இருந்திருந்து போர் அடிச்சு போய், அம்மாவுக்கு தெரியாம பின் ஒழுங்கையால Cricket, Volleyball எண்டு திரிய, அம்மா இவனை இங்சை வைத்திருந்தால் கரைச்சல் எப்பிடியாவது கொழும்புக்கு அனுப்ப வேணும் எண்டு தீர்மானிச்சா.

ஆனா கொழும்புக்கு போறது ஒண்டும் லேசான வேலையில்லை. வங்களாவடி சந்தியில தொடங்கி யாழ்ப்பணம், ஆனையிறவு, கிளிநொச்சி, மாங்குளம் , வவுனியா எண்டு வழி  நெடுக பிள்ளை பிடி முகாம்கள் இருக்கு. இவ்வளவு முகாமையும் தாண்டி, risk   எடுத்து போறதுக்கு பயமா இருந்தாலும் வீட்டுக்க அடைபட்டு இருக்கேலாம நானும் ஓம் எண்டுட்டன். பஸ்சில பாதுகாப்பா போக ஏலாது. வேற என்ன செய்யலாம் எண்டு யோசிக்கேக, பக்கத்து வீட்டு குகன் அண்ணா, நீ பயப்பிடாம என்னோட லொரியில வாடா. நான் கூட்டிக்கொண்டு போய் காலியில விடிறன் எண்டு சொல்ல நானும் OK எண்டு வெளிக்கிட்டிடன்.

    அம்மன் கோவில்ல ஒருக்கா வடிவா விழுந்து கும்பிட்டு, லொரியில ஏறியாச்சு. லொறி முழுக்க புகையிலை சிற்பம். ஆனா தேவைப்பட்டா எண்டு டிரைவர் seat  க்கு பின்னால இருக்கிற கதவால உள்ழுக்க போய் ஒளிக்க ஒரு சின்ன இடைவெளி விட்டுதான் சிற்பம் அடுக்க பட்டிருந்தது. வங்களாவடி சந்திக்கு போகம, லொறியை வடக்கு ரோடால நேர யாழ்ப்பாணத்துக்கு விட்டு முதல் barrierஐ ஈசியா தாண்டியாச்சு. ஆனா ரெண்டாவது barrier பண்ணை பாலத்தடியில லொறியை மறிச்சு  இறக்கி போட்டாங்கள்.  கொழுப்புக்கு புகையிலை கொண்டு போறன் அது இது எண்டு சொல்ல, ஒரு நமட்டு சிரிப்போட சரி போ எண்டு விட்டுட்டாங்கள். எப்படியும் போற வழியில மாட்டுவார் எண்ட நம்பிக்கை போல.
  எங்கட நல்ல காலத்துக்கு நல்ல அடைமழை பெய்ய தொடங்கிற்று. மழையால கிளிநொச்சி , மாங்குளம் barrier  ஐ இறங்காமலே தாண்டியாச்சு. இன்னும் வவுனியா மட்டும் தான் எண்டு கொஞ்சம் நிம்மதியா போகேக்க வந்தது  வினை.


லொறி மாங்குளம் தாண்டி போய்க்கொண்டு இருந்தது. ரெண்டு பக்கமும் அடர்ந்த காடு. அது அடிக்கடி சண்டை நடக்கிற ஏரியா வேற.  இருந்தாப்போல காட்டுக்க இருந்து கொஞ்ச கூர்க்கா இந்தியன் ஆமிக்காரர் ரோட்டுக்கு வந்தாங்கள். வந்து லொறியை மறிச்சு  காட்டுக்க திருப்பி எங்கள் எல்லாரையும் இறக்கி பின் பக்கம் பார்க்க இருத்தி வத்திருந்தான்கள். பின்னால துப்பாக்கியோட ஆமிக்காரர். நான் அதுதான் என்ர கடைசி நாள் எண்டு நினைச்சன். காட்டுக்க இருந்த படியால பின்னால ரோட்டில என்ன நடக்கிறது எண்டு ஒண்டும் தெரியேல்ல.  ஆனா தொடர்ந்து வாகனங்கள் போற சத்தம் மட்டும் கேட்டுது. ஒரு நாலு ஐந்து மணித்தியாலம் அப்பிடியே இருந்திருப்பம், அதுக்கு பிறகு வாகன சத்தம் குறைஞ்சிது . ஆமிக்காரரும் எங்களை போக சொல்லிற்று தங்கட truck  இல ஏறி போயிற்றாங்கள். அப்பத்தான் போன உயிர் திரும்பி வந்தமாதிரி இருந்தது. பிறகுதான் கேள்விபட்டம் ஒரு பெரிய இராணுவ தொடரணி வவுனியாவில இருந்து யாழ்ப்பாணம் போறதுக்குதான் ஆமிக்காரர் guard பண்ணிக்கொண்டு நின்டிருக்கிறாங்கள் எண்டு. அதுக்குள்ளே human shield மாதிரி நடுவில நாங்கள். எங்கட நல்ல காலத்துக்கு ஒரு பிரச்சினையும் இல்லாத படியால போக விட்டிட்டாங்கள்.

     வவுனியா தாண்டிக்குளம் barrier  இல லொறிக்கு எண்டு தனி க்யூ. லொறிஐ  பதிய போகேக்க நானும் சேர்ந்து போய் பிள்ளை பிடி காரர் பக்கம் போகாமல் மற்ற பக்கத்தால போய் லொறியில  ஏறிற்றன்.   கடைசி barrier  உம் தாண்டியாச்சு. ஆனா கன நேரம் காட்டுக்க நிண்டதால இரவு சாப்பாட்டுக்கு வவுனியவில நிக்க வேண்டியதா போச்சு. இரவு சாப்பாடு சாப்பிட்டு வெளியில வாறன், வெள்ளை வான் ஒண்டு  பக்கத்தில வந்து என்னை இழுத்து உள்ளுக்க போட்டுக்கொண்டு போயிற்றாங்கள். ஊரில பிடிபட்டாலும் ஒண்டு ரெண்டு தெரிஞ்ச பெடியளாவது இருந்திருப்பான்கள். இஞ்ச வந்து இப்பிடி தனிய மட்டு பட்டுட்டன் . ஆனா குகன் அண்ணா விடயில்லை. பின்னால லொறியில தொடர்ந்து வந்து அவங்கட முகாமில, யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா எல்லா இடமும் கதைச்சு  பதிஞ்சுதான் வாறம். அது இது என்னது சொல்லி ஒருமாதிரி வெளியால கொண்டு வந்திர்றார்.  அண்டைக்கு காலிக்கு போனவன்தான் இந்தியன் ஆமி ஊரை விட்டு போகுமட்டும் ஊர் பக்கம் போகவே இல்லை.
  இண்டைக்கு குகன் அண்ணா எங்களோட இல்லை . ஆனா அண்டைக்கு செய்த உதவியை உயிர் உள்ளவரை மறக்க ஏலாது..

Saturday, October 8, 2011

ஒரு அகதியின் டயரி - 4 அமைதி படை


நம்ம ஊர் ஆட்கள் சிலபேருக்கு   ஊரை பற்றியோ தீவை பற்றியோ குறையா கதைச்சா கோபம் பத்திக்கொண்டு வந்திரும்.  கஷ்டபட்டு உழைக்கிறதால உடம்பில உரமேறின ஆட்கள் அவையள்.  கையால ஒண்டு விட்டினமேண்டா சாகும் மட்டும் மறக்க ஏலாது.  யாழ்ப்பாணமே ஒரு சின்ன இடம்தான். அதுக்குள்ளே ஊருரா பிரிச்சு தங்கட ஊர் பெருசு. உங்கட குறைவு எண்டு கதைக்கிறவையும் கனபேர் இருந்திச்சினம்.  யாழ்ப்பணம் போற நேரத்தில,  சிலபேர் தீவை பற்றி குறைவா கதைச்சு என்ர தத்தாட்டையும் அடி வாங்கியிருக்கினம்.  யாழ்ப்பாண பள்ளிகூடத்தில என்ர முதல் நாள். பக்கத்தில இருந்தவன் எந்த ஊரென்று கேட்டான்.  நான் ஊரின்ர பெயர சொல்ல " ஐயோ இன்னொரு தீவானா. எப்பிடி பக்கத்தில வைச்சு சமாளிக்க போறேனோ தெரியேல்ல " எண்டான்.  எனக்கும் தாத்தான்ர  gene தானே.  வந்த ஆத்திரத்துக்கு ஒண்டு குடுக்கவேணும் மாதிரித்தான் இருந்தது.  ஏதோ என்னால முடிஞ்சது. மனதளவில நாலு சாத்து சாத்திற்று சும்மா இருந்திட்டன். 

  தலைவலி போய் திருகுவலி வந்த மாதிரி,  இந்திய  "அமைதி படை" வந்தும் நாங்க ஓடுறது நிக்கேல்ல.  ஆனா இந்தமுறை வித்தியாசமா எங்கட ஊர் பக்கம் சனம் அகதியா வர தொடங்கிற்றினம்.  யாழப்பாணத்தை பிடிக்க இந்திய இராணுவம் நடத்தின முதல் சண்டை. அவையின்ர உண்மையான முகம் அண்டைக்குத்தான் தெரிய தொடங்கிச்சு. அமைதிப்படைதானே எண்டு சண்டை நடக்கேக்க, வெளிக்கிட்டு ஓடாமல், வீட்ட இருந்த ஆட்கள் குடும்பத்தோட  கொல்லபட்டினர். இதைவிட  யாழ் வைத்தியசாலை படுகொலை, அராலி துறை படகு தாக்குதல் எண்டு சனம் கும்பல் கும்பலா செத்துபோச்சு. 
     
ஊருக்க சனபுழக்கம் கூடின படியால சாப்பாட்டு சாமானுக்கும் தட்டுபாடு வந்திற்று. கடையளிலஇதுவரைக்கும் விக்காமல் இருந்த உழுத்துப்போன அரிசி, புழு பிடிச்ச மா எல்லாமே வித்து தீர்ந்திற்று. சனம் கையில பையோட அரிசி வாங்க சந்தி சந்தியா அலைஞ்சு திரிஞ்சினம். இடைக்கிட  சைக்கிள்காரர் கொண்டுவாற அரிசி மூட்டையும்  ஒரு நிமிசத்தில வித்து தீந்திரும்.  


அப்பத்தான் பார்த்தான், என்ர பள்ளிகூடத்து பக்கத்து சீற் காரனும் பையோட நிண்டான். "என்ன இந்த பக்கம்" எண்டன் .  அரிசி வாங்க வந்தனான். தன்ர  தாத்தாவின்ர ஊரும் வேலணைதான் எண்டான்.  ஒரு நமட்டு சிரிப்போட, சரி வா மச்சான் எண்டு ரெண்டுபேருமா  சேர்ந்து அரிசி வாங்க அலைய தொடங்கினம்.

  இந்த   அகதி வாழ்க்கையில   பிரதேசவாதமும் சாதி வெறியும் குறைஞ்சு போனது என்னவோ உண்மைதான்.