Tuesday, August 16, 2011

பஸ் டிக்கெட்டும் தோசை கடையும்

         பள்ளி கூடத்தில மகனை இறக்கேக்க "அப்பா ice block வாங்க வேணும். ஒரு டொலர் தாங்கோ" எண்டு கொஞ்சம் அதட்டலாவே  கேட்டான்.  விடிய காலமா இறக்கி விட்டிட்டு வேலைக்கு போற அவசரத்தில நான்.  இந்த நேரம் கேட்டு அடம் பிடிச்சா, கட்டாயம் கிடைக்குமென்று நல்லா தெரிஞ்சு வைச்சிருக்கிறான். இப்ப நிண்டு அவனோட வாக்குவாத பட நேரமில்லை. ஒரு டொலரை எடுத்து நீட்டிற்று,  வாகன நெரிசலில நானும் ஐக்கியமானேன்.  
             
         அந்த நாளில எங்களுக்கு காசு கையில கிடைக்கிறது எண்டது குதிரை கொம்பு மாதிரி.  Pocket money எண்டு ஒண்டு இருக்கு எண்டு எங்களுக்கு அப்ப தெரியாம போச்சு. ஆனா பழைய போத்தல், பித்தளை, அலுமினியம் வாங்கிறவற்ற புண்ணியத்தில அடிக்கடி ஐஸ் பழம் வாங்கி குடிச்சிருவம். அப்பா தோட்டத்தில, அடிச்சு முடிச்ச மருந்து போத்தல் ஐஸ் பழமா மாறி இருக்கும்.  ஒரு மருந்து போத்தலுக்கு ஒரு ஐஸ் பழம்,  யானை சோடா போத்தலுக்கு ரெண்டு பழம், பழைய மூக்கு பேணிக்கு மூண்டு ஐஸ் பழம் எண்டு ஒரு கணக்கே இருக்கு. எங்களுக்க நடக்கிற பண்டமாற்று எல்லாம் ஐஸ்பழ கணக்கிலதான் நடக்கும். 
                   ஒருக்கா நான் என்ர காந்தி தாத்தா படம் போட்ட இந்தியன் முத்திரையை மூண்டு ஐஸ் பழத்துக்கு விக்க, ரவி பதிலுக்கு வீட்ட கிடந்த மூக்கு பேணிக்கு ஆட்டைய போட்டுட்டான். இது தெரியாம நான் மூக்கு பேணிய வீட்ட கொண்டர, அம்மா "அங்க பேணிய தேடி திரியினம். இது என்னெண்டு உன்னட்ட  வந்தது. கொண்டுபோய்  குடுத்திற்று வா" எண்டு  விரட்டினா. கடைசியா முத்திரையும் போய் பேணி கள்ளன் எண்டு பட்டம் வாங்கினது தான் மிச்சம்.        

                              ஆனா பள்ளிகூடத்துக்கு முன்னால இருக்கிற மணி அண்ணையின்ர தோசைக்கடையில இந்த பண்டமாற்று எல்லாம் சரி வராது. ஐம்பது சதத்துக்கு, ஒரு பூவரசம் இலையில ரெண்டு தோசையும் கொஞ்ச சம்பலும் தருவார். தோசை சைஸில பூவரசம் இலையா எண்டு யோசிக்க வேண்டாம்.  பூவரசம் இலை சைஸில தோசை அவ்வளவுதான். மத்தியான நேரம்  தோசைக்கடை நிரம்பி வழியும். இடிச்சு பிடிச்சு முன்னுக்கு போறது கஸ்ரம் எண்டாலும், கையை மட்டும் காசோட முன்னுக்கு நீட்டி ஒருமாதிரி தோசையை வாங்கி போடுவன்.
     தோசை வாங்க வீட்ட காசு வாங்கவும் ஒரு ஐடியா வச்சிருந்தனான். வழமையா பள்ளிகூடத்துக்கு நடந்துதான் போறனாங்க. ஆனா கொஞ்சம் லேற் ஆகிற்ரா பஸ்சில போக அம்மா ஒரு ரூபா தருவா. மினி பஸ்சில போக ஒரு ரூபா.ஆனா CTB பஸ்சில ஏறினா எழுபத்தைந்து சதம்தான். ரெண்டு தரம் லேட்ரா வெளிக்கிட்டா , தோசைக்கு காசு  சேர்த்திரலாம். உந்த CTB பஸ்சால வேற நன்மைகளும் இருக்கு. ஊர்ல இருக்கிற வாழைக்குலை எல்லாம்  கெதியா பழுக்கிறது உதாலதான். நுளம்பு (கொசு) தொல்லையை குறைக்கவும் CTB பஸ் உதவுறது. என்ன இறங்கேக்க கொஞ்சம் தள்ளி நிக்கவேணும். இல்லை எண்டா உங்களுக்கும் புகை அடிச்சு போடும்.
.                           ஒரு ரூபா குடுத்து டிக்கெட் எடுத்திற்று இருபத்தைந்து சதம் மிச்சம் கேட்டா, கண்டக்டருக்கு கோபம் வந்திரும். கேக்காட்டி தர மாட்டார் எண்ட படியால, நச்சரிக்கிறதை தவிர வேற வழி இல்லை. ஒரு நாள் இப்பிடித்தான், மிச்சம் கேட்டதுக்கு டிக்கெட்க்கு பின்னால இருபத்தைந்து எண்டு எழுதி தந்திற்று , இறங்கேக்க  வாங்கு எண்டு  சொல்லிற்று முன்னுக்கு போயிற்றார். நானும் இறங்கிற அவசரத்தில திருப்பி கேக்க மறந்து போனன். மத்தியானம் மணியண்ணையின்ர கடையில, இருபத்தைந்து சதத்தையும் பஸ் டிக்கெட்ஐயும் முன்னுக்கு நீடடினன். ஆனா மணியண்ணை "யாரடா அவன் இருபத்தைந்து எண்டு பேப்பரில ஏழுதி நீட்டுறவன் " எண்டு கையை பிடிச்சிர்றார்.  நிலைமையை விளங்கபடுத்தி கையை விடுவிக்கிறத்துக்குள்ள போதும் போதும் எண்டு போச்சு.

 

Thursday, August 4, 2011

கோட்டு வாசல் மிதியாதே


வேலை முடிஞ்சு வீட்ட வெளிக்கிடேக்க  ஆறு மணி.  சிட்னி வாகன நெரிசலில நெரிபட்டு வீட்ட  போய்  சேர எப்பிடியும்  ஏழு ஏழரை ஆகிரும்.
யாழ்ப்பாணத்தில  குச்சொழுங்கை எல்லாம் சைக்கிள்ள ஓடி திரிஞ்ச பழக்கதில, மெயின் ரோட்டில traffic  எண்டா, ஒழுங்கைக்க காரை திருப்பி, குறுக்கால ஓடி,  கொஞ்சம் கெதியாவே வீட்ட வந்திருவம்..  ஆனா, speed camera , red light camera , stop sign , no right turn , no left turn , bus lane, T lane எண்டு ஆயிரத்தெட்டு தடங்கல்கள்.   மாட்டுப்பட்டா, நூற்று கணக்கில சுளையா காசு போயிரும். என்ர கார் ஓட்டம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி எண்டாலும், இது வரைக்கும் ஒருக்காலும்  பிடிபடேல்ல.

     வீட்ட வந்து letter box இல விளம்பர குப்பைகளுக்குள்ள கிடந்த பழுப்பு நிற கடிதத்தை உடைச்சு பார்த்தா, No parking இல காரை நிப்பாட்டினதுக்கு 90 டொலர் தண்டம் எண்டு வந்திருந்தது.  அவசரத்துக்கு இஞ்ச  parking  கிடைக்காது. அண்டைக்கும் அப்படித்தான், பெடியன்ர ஸ்கூலுக்கு பக்கத்தில  parking தேடி அலைஞ்சு, கடைசியா no parking  ஓரத்தில இருந்த கொஞ்ச  இடத்தில காரை விட்டிட்டன். ஆனா காரை முழுசா விட முடியேல்ல. காரின்ர பின் பக்கம் கொஞ்சம் no parking குள்ள .  சரி கொஞ்சம் தானே எண்டு park  பண்ணிற்று போய்ரன்.  அதுக்குதான் இண்டைக்கு தண்டம் வந்திருக்கு.  வேலையால வந்த எரிச்சலோட இதுவும் சேர்ந்து, "கோட்டுக்கு போனாலும் பரவாயில்லை. இந்த காசு கட்டுற இல்லை " எண்டு புறு புறுத்துக்கொண்டு வீட்டுக்க போனன்.

   அது ஆயிரத்து தொள்ளயிரத்து எழுபதுகளில் சிறிமாவோ பண்டார நாயக்க நாட்டை ஆண்ட காலம். சனம் ஒரு இறாத்தல் பாணுக்கு, விடிய காலம நாலுமணிக்கு போய் சங்க கடையில வரிசையில நிண்ட காலம். பாணுக்கு மட்டுமில்ல, அரிசிக்கும் பஞ்சம் தான். ஒரு மாவட்டத்தில இருந்து மற்ற மாவட்டத்துக்கு நெல்லு கொண்டு போக ஏலாது. அப்பிடி ஒரு சட்டம். ஆனா எங்க தாத்தா  வன்னியில அவற்ற வயலில விளைஞ்ச நெல்லில ரெண்டு மூட்டையை, ஊருக்கு வரேக்க  போட்டுக்கொண்டு வந்திற்றார். ஆனா வழியில ஆனையிறவுல போலீஸ் மறிச்சு போட்டங்கள். போலீஸ் க்கு காசை கொடுத்து சமாளிச்சிருக்கலாம். இல்ல பேசாம தண்டத்தை கட்டி இருக்கலாம். ஆனா "என்ர வயல்ல விளைஞ்ச நெல்லு. நான் வீட்ட கொண்டு வர ஏலாது எண்டது என்ன ஞாயம்" எண்டு கோட்டுக்கு போயிற்ரார்.சிறிமாவின்ர ஆட்சி, போய் JR ஆட்சி வந்து சிறிமாவோவின்ர citizenship ஐயும் பறிச்சாசு. ஆனா தாத்தாவின்ர கோட் கேஸ் முடிஞ்ச பாடில்ல. 

   நானும் ஒரு நாள், கோட் பார்க்க தாத்தாவோட போனனான். ஊர்காவல்துறை ஒரு அழகான பட்டினம். ஒருபக்கம் படகு துறை, Customs office , போலீஸ் ஸ்டேஷன், ஆஸ்பத்திரி. , கடலுக்கு அந்த பக்கம் கரைநகர்ல கடற்படை முகாம், Ceynor  பாக்டரி, கடலுக்கு நடுவில ஒல்லாந்தர் காலத்து கடற்கோட்டை.  இந்தியாவில இருந்து வடக்கன் மாடுகளும், வீடு கட்டுற ஓடும் இங்கை வந்து இறங்கிறது.  மற்ற தீவுகளுக்கு  இஞ்ச இருந்துதான் படகு சேவை தொடங்கிறதால படகுத்துறை எப்பவும் கலகலப்பா இருக்கும். அந்த படகுகளில் ஒன்றுதான் குமுதினி. அந்த படகில்தான் 85 ம் ஆண்டு நடு கடலில வைத்து கடற்படையால், குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் நாற்பதுக்கு மேற்பட்டோர்   குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். மேலும் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருந்தனர்.

தாத்தாவோட கேஸ்க்கு நாங்கள் நேரத்துக்கே போயிற்றம். விதி படத்தில வாற மாதிரி, வாத, பிரதி வாதங்கள் சூடு பறக்கும்   எண்டு நம்பியிருந்த எனக்கு எமாற்றம்தான். போன உடனேயே இன்னொரு நாளுக்கு கேஸ் பின்போட்டு அனுப்பி விட்டுடினம். கடைசியா  பிற்போட்டு, பிற்போட்டு, தாத்தா இறந்த பிறகும் கோட்டில இருந்து கேசுக்கு ஆஜர் ஆக சொல்லி கடதாசி வாறது நிக்கேல்ல.. 


  இரவு சாப்பாடு முடிய போய் கம்ப்யூட்டரை ON பண்ணினன். "   என்னப்பா வந்ததும் வராததுமா கம்ப்யூட்டருக்கு முன்னால போய் இருக்கிறியள் " எண்டதுக்கு " கொஞ்சம் பொறும் இந்த parking டிக்கெட் ஐ கட்டிபோட்டு வாறன்" எண்டன்.